இரு தரப்பினரிடையே மோதல்; 3 பேருக்கு கத்திக்குத்து 22 பேர் மீது வழக்கு


இரு தரப்பினரிடையே மோதல்; 3 பேருக்கு கத்திக்குத்து 22 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Sep 2018 10:30 PM GMT (Updated: 11 Sep 2018 6:54 PM GMT)

திருவள்ளூரில் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வள்ளுவர்புரத்தை சேர்ந்தவர் மனோகர் (வயது 31). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மனோகர் தன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சுரேந்தர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அதே பகுதியை சேர்ந்த சுந்தர், சக்தி, சுமன், வினோத், விக்கி என்கிற விக்ரம், ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து மனோகரை கையாலும் உருட்டு கட்டையாலும் தாக்கி கத்தியால் குத்தியுள்ளார்.

22 பேர் மீது வழக்கு

மேலும் அவர்கள் மனோகரின் உறவினர்களான ஜானகி, ராஜலட்சுமி, காயத்ரி ஆகியோரையும் மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பதிலுக்கு மனோகர் தனது உறவினர்களான குமரேசன், நவக்குமார், தியாகு, சரவணன், தீபன், ஞானக்குமார், திவாகர், சுனீர், ராஜ்குமார், ஜானகி, ரூமனி, அபினேஷ், ஜீவா, ராஜேஷ் ஆகியோருடன் சுரேந்தர் தரப்பினரை கையாலும் உருட்டுக் கட்டையாலும் தாக்கினார். மேலும் அவர்கள் கத்தியால் குத்தியதில் சுரேந்தர் தரப்பை சேர்ந்த 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story