நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியலுக்கு முயன்ற பெண்கள்


நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியலுக்கு முயன்ற பெண்கள்
x
தினத்தந்தி 11 Sep 2018 11:00 PM GMT (Updated: 11 Sep 2018 7:01 PM GMT)

நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலுக்கு முயன்றனர். அவர்களுடன் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த தடங்கம் ஊராட்சிக்குட்பட்டது சித்தேஸ்வரா நகர், சவுளுப்பட்டி. இந்த பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகமானது பஞ்சாயத்து குடிநீர் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் ஆகியவற்றை வழங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. போதிய குடிநீர் இல்லாமல் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் அரசு கலைக்கல்லூரி அருகே பைபாஸ் சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக திரண்டனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி திட்ட இயக்குனர் (உள்கட்டமைப்பு) ரவிசங்கர் பிரசாத் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அதியமான்கோட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கோரிக்கைககள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இதுபற்றி பெண்கள் கூறியதாவது:-

சித்தேஸ்வரா நகர் மற்றும் சவுளுப்பட்டி ஆகிய பகுதிகளில் பல வீடுகளில் முறைகேடான முறையில் மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story