வியாபாரிகள் சங்கம் சார்பாக ஹெல்மெட் அணிய வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி


வியாபாரிகள் சங்கம் சார்பாக ஹெல்மெட் அணிய வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 11 Sep 2018 10:15 PM GMT (Updated: 11 Sep 2018 7:08 PM GMT)

மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மோட்டர் சைக்கிள் பேரணி நடந்தது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மோட்டர் சைக்கிள் பேரணி நடந்தது.

இந்த பேரணி உத்திரமேரூர் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து தொடங்கியது. இந்த பேரணியை உத்திரமேரூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி என்.சச்சிதானந்தம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் உத்திரமேரூர் தலைவர் டி.ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் கே.வி.சேகர், ஜெ.விவேகானந்தன், பொருளாளர் நந்தகிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆர்.பி.செந்தில்குமார், உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அதிகாரி கேசவன் ஆகியோர் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்து கூறினார்கள்.

இந்த பேரணி உத்திரமேரூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் முடிந்தது. இந்த பேரணியில் ஆட்டோ டிரைவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், போலீசார், வியாபாரிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஏ.சண்முகம் நன்றி கூறினார். கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Next Story