சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலையில் உருண்டு போராட்டம்


சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலையில் உருண்டு போராட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2018 10:45 PM GMT (Updated: 11 Sep 2018 7:14 PM GMT)

சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினார்கள்.

வண்டலூர்,

ஊரப்பாக்கத்தில் இருந்து நல்லம்பாக்கம் வரை சுமார் 14 கிலோ மீட்டர் சாலை மாநில ஊரக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையை 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் இடையில் உள்ள காட்டூரில் இருந்து அருங்கால் வரை சுமார் 700 மீட்டர் கொண்ட சாலையும், இதே போல நல்லம்பாக்கத்தில் இருந்து ஊனைமாஞ்சேரி கிரஷர் பகுதி வரையிலான 2 கிலோமீட்டர் கொண்ட சாலை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் செல்கிறது.

இந்த பகுதியில் தார் சாலை அமைப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்காத காரணத்தால் இந்த இடைப்பட்ட பகுதியில் மாநில ஊரக நெடுஞ்சாலைத்துறையினர் தார் சாலையாக மாற்ற முடியவில்லை, இதன் காரணமாக இந்த குறிப்பிட்ட இடைவெளியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

போராட்டம்

மேலும் இந்த சாலை வழியாக இயங்கிய சில அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காரனைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், கீரப்பாக்கம், முருகமங்கலம், நல்லம்பாக்கம், குமிழி, மேட்டுப்பாளையம், அம்மணம்பாக்கம், ஒத்திவாக்கம், கல்வாய் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சாலையை சீரமைப்பத்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நெற்றியில் பட்டை போட்டுக்கொண்டும், ஒரு சிலர் நாமம் போட்டுக்கொண்டு சாலையில் உருண்டு நூதன முறையில் அதிகாரிகளுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story