அரசு பள்ளியை தரம் உயர்த்தக்கோரி பசு மாட்டிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம்


அரசு பள்ளியை தரம் உயர்த்தக்கோரி பசு மாட்டிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2018 10:45 PM GMT (Updated: 11 Sep 2018 7:38 PM GMT)

அரசு பள்ளியை தரம் உயர்த்தக் கோரி பசு மாட்டிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 242 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதிக அளவில் மாணவ, மாணவிகள் படிப்பதால் இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன் அதற்கான வைப்புத் தொகை ரூ.1 லட்சமும் அரசுக்கு செலுத்தி உள்ளனர்.

ஆனால், இந்த கல்வி ஆண்டிலும் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. இதனால், விரக்தி அடைந்த அந்த பகுதி மக்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் பசு மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, நேற்று மதியம் காரைக்குளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பசு மாட்டிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். அப்போது அவர்கள் பள்ளியை உடனடியாக தரம் உயர்த்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

Next Story