போடி பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்


போடி பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
x
தினத்தந்தி 11 Sep 2018 10:00 PM GMT (Updated: 11 Sep 2018 9:00 PM GMT)

போடி பகுதியில் நடக்கிற பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.

போடி,

போடி தாலுகாவுக்கு உட்பட்ட போ.மீனாட்சிபுரம், சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், புதுக்குளம் ஆகிய பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி போ.மீனாட்சிபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் சொட்டு நீர் பாசனத்திட்டத்தின் கீழ் எண்ணெய் பனையில் ஊடுபயிராக பயிரிட்டுள்ள பருத்தி, கொத்தமல்லி சாகுபடி நிலத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

தமிழ்நாடு ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தேவாரம் முதல் பெருமாள்கவுண்டன்பட்டி வரை ரூ.67 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.1¼ லட்சம் மதிப்பில் கட்டப்படுகிற தடுப்பணை பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.

ராசிங்காபுரம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தெடுக்கும் பணி, அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், பொது கழிப்பறை, புது வாழ்வுத்திட்டத்தின் கீழ் விடிவெள்ளி திறமை கற்றல் மையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.

போடியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் புதுக்குளம் கண்மாய் செல்லும் பாதையில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியையும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) மஞ்சாளறு வடி நிலக்கோட்ட செயற்பொறியாளர் சென்றாயப்பெருமாள், மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கிஷோர் குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அபிதாஹனீப், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதமணி, சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

Next Story