தாம்பரம் சானடோரியம் பஸ் நிறுத்த சாலையில் பள்ளங்கள்; பயணிகள் அவதி சீரமைக்க கோரிக்கை


தாம்பரம் சானடோரியம் பஸ் நிறுத்த சாலையில் பள்ளங்கள்; பயணிகள் அவதி சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 11 Sep 2018 11:15 PM GMT (Updated: 11 Sep 2018 9:17 PM GMT)

தாம்பரம் சானடோரியம் பஸ் நிறுத்த சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சாலையை உடனே சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம்

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. சென்னையில் இருந்து தாம்பரம் வரும் மாநகர பஸ்கள் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சீபுரம் செல்லும் விரைவு பஸ்கள் ஆகியவை இந்த பஸ் நிறுத்தத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி செல்கிறது.

இந்த பஸ் நிறுத்தத்தின் சாலை பல மாதங்களாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டு இருக்கிறது. மழை காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாய் மாறிவிடுகிறது.

இதனால் வழக்கமாக வரக் கூடிய பஸ்கள் பஸ்நிறுத்தத்துக்கு வராமல், தற்போது வருவதில்லை ஜி.எஸ்.டி. சாலையில் நின்றே பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் வெயிலிலும் மழையிலும் நின்று பஸ் ஏறும் அவல நிலை இருப்பதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சீரமைக்க கோரிக்கை

மேலும் ஜி.எஸ்.டி. சாலையிலேயே பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

தாம்பரம் கோர்ட்டு மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு வரும் பயணிகள் பயன்படுத்தும் இந்த பஸ் நிறுத்தத்தின் சாலையை சீரமைக்க பலமுறை புகார் கொடுத்தும் நெடுஞ்சாலை துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சானடோரியம் பஸ் நிறுத்த சாலையை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story