திருப்புளியால் குத்தப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி சாவு அடுத்த சில மணிநேரத்தில் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்த உருக்கம்


திருப்புளியால் குத்தப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி சாவு அடுத்த சில மணிநேரத்தில் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்த உருக்கம்
x
தினத்தந்தி 11 Sep 2018 11:00 PM GMT (Updated: 11 Sep 2018 10:56 PM GMT)

பெங்களூருவில் திருப்புளியால் குத்தப்பட்ட என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி செத்தார். அவர் இறந்த சில மணி நேரத்தில் அவரது கர்ப்பிணி மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுத்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவில் திருப்புளியால் குத்தப்பட்ட என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி செத்தார். அவர் இறந்த சில மணி நேரத்தில் அவரது கர்ப்பிணி மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுத்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

பெங்களூரு பனசங்கரி 3-வது ஸ்டேஜில் வசித்து வந்தவர் குருபிரசாந்த் (வயது 31). இவர், பெல்லந்தூரில் உள்ள பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த 6-ந் தேதி குருபிரசாந்த் கம்ப்யூட்டர் மையத்துக்கு ‘பிரிண்ட்-அவுட்’ எடுக்க சென்றார்.

அப்போது கடையில் இருந்த கார்த்திக் என்பவருக்கும் குருபிரசாந்த் இடையே தகராறு ஏற்பட்டது. அதாவது, ‘பிரிண்ட்-அவுட்’ ஒன்றுக்கு தொடக்கத்தில் ரூ.2 கேட்ட கார்த்திக், பின்னர் கூடுதல் விலை கூறியுள்ளதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

பரிதாப சாவு

இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கார்த்திக், திருப்புளியை (ஸ்குரூப்டிரைவ்) எடுத்து குருபிரசாந்தின் தலையில் குத்தியுள்ளார். இதனால் அவருடைய தலையில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.

குழந்தையை பெற்றெடுத்த மனைவி

இதற்கிடையே, பிரசவ வலி ஏற்பட்டதால், கணவர் குருபிரசாத் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிேலயே அவரது மனைவி மமதா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவரிடம், குருபிரசாத் இறந்தது பற்றி அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை. கணவர் இறந்த அடுத்த சில மணிநேரத்தில் மமதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

உருக்கம்

கணவர் இறந்த சில மணி நேரத்தில் அவரது மனைவி குழந்தையை பெற்றெடுத்த சம்பவத்தை அறிந்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Next Story