பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயார் கைது


பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயார் கைது
x
தினத்தந்தி 11 Sep 2018 11:37 PM GMT (Updated: 11 Sep 2018 11:37 PM GMT)

மங்கலம் அருகே பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயாரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்,

பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 23). மூடை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி தமிழ் இசக்கி (21). இவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் சிவன்யாஸ்ரீ என்ற மகள் இருந்தாள். நாகராஜ் தனது குடும்பத்துடன் திருப்பூரை அடுத்த சாமளாபுரம் தோட்டத்து சாலையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

தமிழ் இசக்கி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் கடந்த 5 மாதங்களாக வேலை செய்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். இவர்கள் குடியிருக்கும் வீட்டையொட்டிய மற்றொரு வீட்டில் நாகராஜின் தந்தை பழனிசாமியும், தாயார் தனலட்சுமியும் வசித்து வருகிறார்கள்.

கடந்த 9-ந் தேதி மாலையில் தமிழ் இசக்கியும், அவருடைய 2½ வயது மகள் சிவன்யாஸ்ரீயும் மட்டும் வீட்டில் இருந்தனர். இதற்கிடையில் வெளியில் சென்று இருந்த நாகராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, குழந்தை சிவன்யாஸ்ரீ வாயில்நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே கணவன்-மனைவி இருவரும் குழந்தையை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். இதையடுத்து குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை சிவன்யாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மங்கலம் போலீசார் விரைந்து சென்று குழந்தை சிவன்யாஸ்ரீயின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கிற்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சிவன்யாஸ்ரீயின் பாட்டி தனலட்சுமி மங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிவன்யாஸ்ரீயின் தாயாரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் கணவர் எந்தநேரமும் வாட்ஸ்-அப்பில் பேசிக்கொண்டும், குறுந்தகவல்களை யாரோ ஒருவருக்கு அனுப்பிக்கொண்டும் இருந்ததால், அவர்மீது சந்தேகம் ஏற்பட்டு குழந்தையை கொன்றதாக தமிழ் இசக்கி தெரிவித்தார். இதையடுத்து மங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தமிழ் இசக்கியை கைது செய்து, திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

Next Story