வாய்க்காலில் செல்லும் தண்ணீர் குடியிருப்புக்குள் புகும் அவலம்


வாய்க்காலில் செல்லும் தண்ணீர் குடியிருப்புக்குள் புகும் அவலம்
x
தினத்தந்தி 12 Sep 2018 9:30 PM GMT (Updated: 12 Sep 2018 7:32 PM GMT)

தஞ்சை சீனிவாசபுரம் அருகே கல்லணைக்கால்வாயிலிருந்து செல்லும் தண்ணீர் குடியிருப்புக்குள் புகுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர், 


தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள்) டெல்டா பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம்.குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு 22-ந் தேதி வந்து அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆறுகளில் வெள்ளமாக கரைபுரண்டு ஓடிய போதிலும் தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் சம்பா சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் வேதனையில் தவிக்கிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சை சீனிவாசபுரம் அருகே ஓடக்கூடிய கல்லணைக்கால்வாயிலிருந்து களிமேடு, ரெட்டி பாளையம் கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான இடதுக்கரை வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. இந்த வாய்க்கால் 3 மீட்டர் அகலம் இருந்த நிலையில், குடிமராமத்து திட்டப்பணிக்காக வாய்க்காலின் அளவு குறைக்கப்பட்டு இருபுறமும் சிமெண்டு தடுப்புகள் கட்டப்பட்டது. இந்த தடுப்புகள் முறையாக பராமரிக்கப்படாததால் தண்ணீர் கீழே வழிந்தோடி அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் விவசாய பாசனத்திற்கும் தண்ணீர் செல்லாமல் வீணாகிறது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- இங்குள்ள வாய்க்காலின் இரு கரைகளும் நல்ல நிலையில் தான் இருந்தது. தேவையில்லாமல் நன்றாக இருந்த கரைகளை இடித்து விட்டு, குடிமராமத்து திட்டப்பணி என்று வாய்க்காலின் அகலத்தை குறைத்து விட்டனர். இதனால் வாய்க்காலில் ஓடக்கூடிய தண்ணீர் கரைகளை மூழ்கடித்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து விடுகிறது. எனவே தண்ணீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story