தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த மின்கம்பிகளால் தடுப்பணை கரைகள் அமைக்கும் பணி தாமதம்


தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த மின்கம்பிகளால் தடுப்பணை கரைகள் அமைக்கும் பணி தாமதம்
x
தினத்தந்தி 12 Sep 2018 10:00 PM GMT (Updated: 12 Sep 2018 7:34 PM GMT)

தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த மின்கம்பிகளால் தடுப்பணை கரைகள் அமைக்கும் பணிகள் தாமதப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக திகழ்வது பூண்டி ஏரி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் மதகுகள் வழியாக தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஒதப்பை, சோமதேவன்பட்டு, மோவூர், மெய்யூர், செம்பேடு, தாமரைபாக்கம் வழியாக பாயந்து வங்க கடலில் கலக்கிறது. 

இப்படி தண்ணீர் வீணாக வங்க கடலில்  கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன் பெறும் விதத்திலும், நிலத்தடி நீர் மட்டம் உயருவதற்காகவும் தமிழக அரசு ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு செய்து ரூ.7 கோடி ஒதுக்கியது.

உயர் அழுத்த மின்கம்பிகள்

 இந்த நிதியை கொண்டு 200 மீட்டர் நீளத்துக்கு தடுப்பணை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கப்பட்டு இரவு பகலாக நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 95 சதவீத பணிகள் முடிவு பெற்று தற்போது தடுப்பணை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் இரு புறங்களில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு  20 அடி உயரத்தில் கரைகள் அமைக்கும் பணி நடந்து  வருகின்றன. கரைகள் அமைக்கும் பகுதியில் உயர் அழுத்த  மின் கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கின்றன. இதனால் கரைகள் அமைக்கும் பணிகள் தாமதமாகி உள்ளது. 

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் உயர் அழுத்த மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் உயர் அழுத்த மின் கம்பிகளை சீரமைத்து துரித நடவடிக்கை எடுத்தால் தடுப்பணை பணிகள் நிறைவு பெற்று மழை பெய்யும்போது தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்று பொதுமக்களும் மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுததுள்ளனர்.

Next Story