உத்திரமேரூர் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் வழிபட்ட சிலை பல்லவர் காலத்தை சேர்ந்தது


உத்திரமேரூர் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் வழிபட்ட சிலை பல்லவர் காலத்தை சேர்ந்தது
x
தினத்தந்தி 12 Sep 2018 10:30 PM GMT (Updated: 12 Sep 2018 7:58 PM GMT)

உத்திரமேரூர் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் வழிபட்ட சிலை பல்லவர் கால சிலை என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் வரலாற்று ஆய்வுமைய தலைவர் க.பாலாஜி, உறுப்பினர்கள் யுவராஜ், சுரேஷ் ஆகியோர் உத்திரமேரூர் அருகே அனுமந்தண்டலத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வழிபட்டு வந்த சிலையை கள ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிலை 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர்கள் காலத்தில் கொற்றவை சிலை என்பதை கண்டுபிடித்தனர்.

இந்த கொற்றவை சிலையில் வலப்பக்க காலின் அருகே நவகண்டம் கொடுக்கும் ஒரு வீரனின் உருவம் உள்ளது. நவ கண்டம் என்பது தனது வாளால் தனது தலையை தானே பலிகொடுக்கும் சடங்கு முறையாகும். இடது பக்கத்தின் காலின் கீழ் ஒரு பெண் மண்டியிட்டு கொற்றவை சிலைக்கு குடம் போன்ற ஒரு பாத்திரத்தில் இருந்து பூக்களை எடுத்து மலர்தூவி வழிபடுவது போல உள்ளது.

தன்னுடைய தலையை அறுத்து

ஆதித்தமிழரின் முதல் தெய்வமாக, தலைத்தெய்வமாக, மறவர்களுக்கு வெற்றியை தருபவளாக, போருக்கு அதிபதியாக கொற்றவை தெய்வம் விளங்கியது. மன்னர்கள் போர்க்களங்களுக்கு செல்லும் முன்பாக தங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஊரைக்கூட்டி, படையை திரட்டி, விழாக்கோலம் பூணச்செய்து மாபெரும் வழிபாடு நடத்தி இந்த கொற்றவை சிலைக்கு முன்பாக ஒரு சிறந்த வீரனை தேர்வு செய்து அந்த வீரன் தன்னுடைய தலையை தனது வாளால் தானே அறுத்து பலி கொடுக்கும் சடங்கு நடை பெறும். இவ்வாறு செய்தால் போர்க்களங்களில் கொற்றவை தங்களுக்கு கட்டாயம் வெற்றியை தருவாள் என்பது நம்பிக்கை. அவ்வளவு சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும்.

இந்த சிலையை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் கவுரவ ஆலோசகரும், தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியருமான மார்க்சியாகாந்தியிடம் காட்டினார்கள்.

அவர் அதனை ஆய்வு செய்து கூறுகையில்:-

இந்த சிலை நின்ற நிலையில் 5 அடி உயரம், 3½ அடி அகலம், 8 கைகள், தலையில் ஆபரணங்கள் நிறைந்த கிரீடம், காதில் அணிகலன், கழுத்தில் மாலை, மார்பில் கச்சை, இடையில் அரைஆடை, புஜங்களில் வாகுவளையல்கள், மணிக்கட்டில் வளையல்கள், கால்களில் சிலப்புடன் காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story