ஓடும் ரெயிலில் பெண் பயணி முன்பு ஆபாச செயலில் ஈடுபட்டவருக்கு 10 நாள் ஜெயில் ரெயில்வே கோர்ட்டு தீர்ப்பு


ஓடும் ரெயிலில் பெண் பயணி முன்பு ஆபாச செயலில் ஈடுபட்டவருக்கு 10 நாள் ஜெயில் ரெயில்வே கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Sep 2018 10:30 PM GMT (Updated: 12 Sep 2018 8:15 PM GMT)

ஓடும் ரெயிலில் பெண் பயணி முன்பு ஆபாச செயலில் ஈடுபட்டவருக்கு 10 நாள் ஜெயில் தண்டனை வழங்கி ரெயில்வே கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மும்பை, 

ஓடும் ரெயிலில் பெண் பயணி முன்பு ஆபாச செயலில் ஈடுபட்டவருக்கு 10 நாள் ஜெயில் தண்டனை வழங்கி ரெயில்வே கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பெண் பயணி

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து பன்வெல் நோக்கி மின்சார ரெயில் ஒன்று கடந்த 7-ந்தேதி புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் மகளிர் பெட்டியில் பெண் பயணி அமர்ந்திருந்தார். அந்த பெட்டியில் ஏறிய வாலிபர் ஒருவர் திடீரென பேண்ட்டை கழற்றி பெண் பயணி முன் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.

இதனைக்கண்ட அந்த பெண் வாலிபரை செல்போனில் படம் பிடித்தார். மேலும் அவரை பிடிக்க முயன்றார். அப்போது ரெயில் மஜித் பந்தர் ரெயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த வாலிபர் பிளாட்பாரத்தில் குதித்து தப்பி சென்றுவிட்டார்.

10 நாள் ஜெயில்

இந்த சம்பவம் குறித்து பெண் பயணி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் செல்போனில் இருந்த வாலிபரின் புகைப்படத்தை வைத்து அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் மஜித் பந்தர் ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த அந்த வாலிபரை நேற்று முன்தினம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், அவரது பெயர் இக்பால் சேக்(வயது19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ரெயில்வே கோர்ட்டு அவருக்கு 10 நாள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

Next Story