இன்று விநாயகர் சதுர்த்தி விழா: பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


இன்று விநாயகர் சதுர்த்தி விழா: பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 12 Sep 2018 10:39 PM GMT (Updated: 12 Sep 2018 10:39 PM GMT)

திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் அலைமோதினர்.

திருவண்ணாமலை,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

திருவண்ணாமலையிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்காக அவல், பொரி, பழ வகைகள், பூக்கள் போன்றவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் திருவண்ணாமலை கடை வீதியில் திரண்டனர். இதனால் கடை வீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காணும் இடமெல்லாம் மக்களின் தலையாகவே காட்சி அளித்தது.

மேலும் சாலையோரம் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர். இதுமட்டுமின்றி விநாயகர் சிலையை அலங்கரிக்க சாலையோரம் வண்ண அலங்கார குடைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த குடைகளையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

மாவட்டம் முழுவதும் 1500-க்கும்...

மேலும் இளைஞர்கள் மற்றும் விழாக்குழுவினர் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் வைப்பதற்காக இளைஞர்கள் தனியாக வாகனம் பிடித்து சுமார் 3 அடி முதல் 7 அடி வரை உள்ள சிலைகளை வாங்கி சென்றனர். விநாயகர் சிலைகள் வாங்கி செல்லும் போது இளைஞர்கள் வாணவேடிக்கைகளை வெடித்தும், தாரைதப்பட்டைகள் முழங்க வாகனங்களில் கொண்டு சென்றனர்.

நேற்று இரவு முதல் இளைஞர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைப்பதற்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் முன்பு வண்ண விளக்குகள், ஒலி பெருக்கிகள் அமைத்து கொண்டாட்டத்துக்கு தயாராகினர். மாவட்டம் முழுவதும் 1500-க்கு மேற்பட்ட இடங்களிலும், திருவண்ணாமலையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளதாக இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. அதேபோல திருவூடல் தெருவில் உள்ள கற்பக விநாயகர் கோவில், திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள அசோக மரத்து விநாயகர் கோவில், காந்திசிலை அருகே உள்ள இரட்டை பிள்ளையார் கோவில் என அனைத்து விநாயகர் கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை தாமரைக்குளம், செங்கம் சிங்காரப்பேட்டை ஏரி, கோணிராயன்குளம், வந்தவாசி ஐந்து கண் வாராபதி, பூமா செட்டி குளம், போளூர் கூவூர் ஏரி ஆகிய நீர்நிலைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி சிலைகளை கரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story