நெல்லை பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் முற்றுகை போராட்டம் தமிழில் தேர்வு எழுத அனுமதி வழங்க கோரிக்கை


நெல்லை பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் முற்றுகை போராட்டம் தமிழில் தேர்வு எழுத அனுமதி வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 12 Sep 2018 11:00 PM GMT (Updated: 12 Sep 2018 10:56 PM GMT)

தமிழில் தேர்வு எழுத அனுமதி வழங்க கோரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பு மாணவ, மாணவிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பேட்டை, 

தமிழில் தேர்வு எழுத அனுமதி வழங்க கோரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பு மாணவ, மாணவிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

நெல்லை அபிஷேகப்பட்டில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பு நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இந்திய மாணவர் சங்கத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்யா, தூத்துக்குடியை சேர்ந்த நிர்வாகிகள் சுரேஷ் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில செயலாளர் மாரியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

தமிழில் தேர்வு எழுத

ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களை தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், யு.ஜி.சி.யை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தை முன்னிட்டு பல்கலைக்கழகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தள்ளு, முள்ளு

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பு ரோட்டில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாணவர் தரப்பை சேர்ந்தவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக துணைவேந்தர் பாஸ்கர் கூறினார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். மாணவர்கள் போராட்டத்தால் பல்கலைக்கழக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story