விக்கிரமசிங்கபுரம் அருகே சோகம்: 2 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை


விக்கிரமசிங்கபுரம் அருகே சோகம்: 2 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 13 Sep 2018 10:30 PM GMT (Updated: 13 Sep 2018 5:55 PM GMT)

நெல்லை அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். வீட்டில் கிடந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விக்கிரமசிங்கபுரம், 

நெல்லை அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். வீட்டில் கிடந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 38). இவருக்கும், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் கஸ்பாவை சேர்ந்த நடராஜன் மகள் ரேவதிக்கும் (28) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதிர்வேல் (7) என்ற மகனும், அஸ்மிதா (3) என்ற மகளும் இருந்தனர்.

மகேந்திரன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதனால் அவர் தனது குடும்பத்துடன் அங்கு குடியிருந்து வந்தார்.

மஞ்சள் காமாலை

இந்த நிலையில் மகேந்திரன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். அவர் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக, கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாமியார் ஊரான சிவந்திபுரம் கஸ்பாவுக்கு வந்தார்.

அங்கு மாமியார் வீட்டுக்கு அருகே உள்ள மற்றொரு வீட்டில் அவர்கள் தங்கியிருந்தனர். சிறுவன் கதிர்வேல் தினமும் காலையில் எழுந்ததும் தனது பாட்டி பிச்சம்மாளை பார்க்க செல்வான். ஆனால் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அவன் பாட்டி வீட்டுக்கு செல்லவில்லை.

பிணமாக கிடந்தனர்

இதனால் பிச்சம்மாள் தனது பேரனை பார்க்க சென்று உள்ளார். அப்போது சாத்தி வைக்கப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு மகேந்திரன், அவருடைய மனைவி ரேவதி, குழந்தைகள் கதிர்வேல், அஸ்மிதா ஆகிய 4 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணங்களாக கிடந்தனர். இதை பார்த்து பிச்சம்மாள் கதறி அழுதார்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன், விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரதாபன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பாலில் விஷம் கலந்து...

அப்போது பிணமாக கிடந்த 4 பேருக்கு அருகில் ஒரு டம்ளரில் பால் இருந்தது. எனவே, பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்றுவிட்டு, கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக தெரிகிறது.

மகேந்திரன் மஞ்சள்காமாலை நோயால் அவதிப்பட்டு வந்து உள்ளார். நீங்கள் இறந்தால் நானும் இறந்து விடுவேன் என மனைவி கூறி வந்துள்ளார். எனவே, இருவரும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்தனர். ஆனால் தாங்கள் இறந்தால் குழந்தைகள் அனாதையாகி விடுமோ என்று கருதிய அவர்கள், குழந்தைகளை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படி, குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு அவர்களும் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம்

மேலும் வீட்டில் நடத்திய சோதனையில், மகேந்திரன் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நான் பிழைக்க போவதில்லை. என்னை பிரிந்து எனது மனைவியும் வாழ மாட்டாள். இதனால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story