கோவில்பட்டியில் கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.19 லட்சம் அபேஸ் மொபட்டின் பெட்டியை திறந்து மர்மநபர்கள் கைவரிசை


கோவில்பட்டியில் கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.19 லட்சம் அபேஸ் மொபட்டின் பெட்டியை திறந்து மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 13 Sep 2018 9:30 PM GMT (Updated: 13 Sep 2018 6:30 PM GMT)

கோவில்பட்டியில் பட்டப்பகலில் கட்டிட காண்டிராக்டரின் மொபட்டின் இருக்கை அடியில் உள்ள பெட்டியை திறந்து, ரூ.19 லட்சத்தை அபேஸ் செய்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் பட்டப்பகலில் கட்டிட காண்டிராக்டரின் மொபட்டின் இருக்கை அடியில் உள்ள பெட்டியை திறந்து, ரூ.19 லட்சத்தை அபேஸ் செய்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கட்டிட காண்டிராக்டர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 34). இவர் கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவர் கோவில்பட்டி அண்ணா நகரில் ஒப்பந்த முறையில் 3 வீடுகளை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் மணிகண்டன் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்தார். மேலும் அவர், வீடுகள் கட்டும் பணிக்காக சிலரிடம் பெற்ற காசோலைகளை வங்கியில் செலுத்தி ரூ.9 லட்சம் பெற்றார்.

ரூ.19 லட்சம் அபேஸ்

அந்த ரூ.19 லட்சத்தையும் மணிண்டன் ஒரு கைப்பையில் வைத்து, அதை தனது மொபட்டின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் மொபட்டில் அண்ணா நகரில் நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட சென்றார். அங்கு மொபட்டில் வைத்த பணத்தை எடுக்காமல் சென்று கட்டிட பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் மணிகண்டன் தனது மொபட்டுக்கு வந்தபோது, அதன் இருக்கையின் அடியில் உள்ள பெட்டி திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.19 லட்சம் அடங்கிய கைப்பையை யாரோ அபேஸ் செய்துவிட்டது தெரியவந்தது. அதை பார்த்து மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வங்கியில் மணிகண்டன் பணத்தை எடுத்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். மணிகண்டன் கட்டுமான பணிகளை பார்வையிட சென்றபோது, அவரது மொபட்டின் இருக்கையின் அடியில் உள்ள பெட்டியை கள்ளச்சாவி மூலம் திறந்த அவர்கள் பணத்தை அபேஸ் செய்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மணிகண்டன் வந்த வழித்தடம், அண்ணா நகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.19 லட்சம் அபேஸ் செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர் வழிப்பறி

கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இந்த சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story