திருப்புவனம் ஆற்றில் தடுப்பணையை கடந்து சென்ற வைகை தண்ணீர்


திருப்புவனம் ஆற்றில் தடுப்பணையை கடந்து சென்ற வைகை தண்ணீர்
x
தினத்தந்தி 13 Sep 2018 10:00 PM GMT (Updated: 13 Sep 2018 7:13 PM GMT)

வைகை அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் திருப்புவனம் வைகை ஆற்றில் உள்ள தடுப்பணையை கடந்து சென்றது. மக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

சிவகங்கை,


வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18 நாட்கள் தண்ணீர் திறப்பதற்கு உத்தரவிட்டார். இதையடுத்து வைகை அணையில் 69 அடி கொள்ளளவாக நீர் கணக்கிடப்பட்டது.

அரசு உத்தரவின்படி கடந்த 10-ந்தேதி மாலையில் இருந்து வைகை அணையில் இருந்து முதற்கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கு 2 ஆயிரம் கன அடி வீதம் 3 நாட்கள் திறக்கப்பட்டும், 3 நாட்களுக்கு பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் சேர்த்து மொத்தம் 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்தும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வைகை அணையில் இருந்து 18 நாட்களுக்கும், 1,560 மில்லியன் கன அடி தண்ணீர் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி மாலை வைகைய அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன் தினம் (12-ந் தேதி) திருப்பு வனம் வைகையாற்றில் உள்ள மேம்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையை கடந்து சென்றது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் உற்சாகமாக தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

ஏற்கனவே வைகை அணையில் இருந்து கடந்த மாதம் திறக்கப்பட்ட உபரி நீர் 21-ந்தேதி திருப்புவனத்தை தாண்டி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story