மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்


மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Sep 2018 9:30 PM GMT (Updated: 13 Sep 2018 7:14 PM GMT)

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி, 

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தினார்.

நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மத்திய மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா, தூத்துக்குடியில் நடந்தது. மாவட்ட செயலாளர் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அருணாச்சலம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் புஷ்பா கிரகவள்ளி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டார். அவர் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவில், மாவட்ட பொருளாளர் பால்ராஜ், மாநில தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் மைக்கேல் அமலதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் என்.ஆர்.தனபாலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பதவி விலக வேண்டும்

மத்திய நிதி மந்திரியை விஜய் மல்லையா வெளிநாடு செல்லும் முன்பு சந்தித்ததாக கூறியுள்ளார். இதன்மூலம் விஜய் மல்லையா மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தப்பி சென்றது தெரிகிறது. நீரவ்மோடி உள்ளிட்டவர்களும் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தப்பி சென்று உள்ளனர் என்பது தெரிகிறது. இந்த அரசு பொதுமக்களை பற்றி கவலைப்படாமல், கார்ப்பரேட் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து உள்ளது. இதனை கண்டித்து 28 கூட்டணி கட்சிகள் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மோடியின் அரசு மக்களுக்கு எதிராக இருப்பதால், விஜய் மல்லையா கூறியதை வைத்து உடனடியாக பதவி விலக வேண்டும்.

ஆரம்பப்பள்ளிகள்

தமிழகத்தில் 1,000 அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து இருப்பதாகவும், முதல்கட்டமாக அதில் 664 பள்ளிகளை மூடுவதாக உத்தேசித்து உள்ளனர். காமராஜர் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக ஆரம்ப பள்ளிகளை திறந்தார். இன்று பள்ளிகளை அரசு மூட இருக்கிறது. இதனை நான் கண்டிக்கிறேன். பள்ளிகள் மூடப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும்.

அரசு டாக்டர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். அவர்கள், மத்திய அரசு வழங்கக்கூடிய ஊதியத்தை போல் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இதில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story