மதுரவாயல் அருகே பிரபல கொள்ளையன் வெட்டிக்கொலை


மதுரவாயல் அருகே பிரபல கொள்ளையன் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 13 Sep 2018 10:00 PM GMT (Updated: 13 Sep 2018 8:29 PM GMT)

மதுரவாயல் அருகே, பிரபல கொள்ளையன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பூந்தமல்லி, 

மதுரவாயலை அடுத்த வானகரம், மீன் மார்க்கெட் அருகே உள்ள காலி இடத்தில் வாலிபர் ஒருவர் உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு பிணமாக கிடந்தவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தது.

மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான வாலிபர் யார்? என விசாரணை நடத்தினர். அதில் அவர் விருகம்பாக்கம், காந்தி நகரைச்சேர்ந்த மணிகண்டன் என்ற புறாமணி (வயது 21) என்பதும், பிரபல கொள்ளையனான அவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், தனது நண்பருடன் வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றார். இரவு 8 மணிவரை அவரது செல்போனில் நண்பர்களும், உறவினர்களும் பேசி உள்ளனர்.

ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர், மணிகண்டனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. அதன்பிறகுதான் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு சம்பவம் நடந்த இடத்தில் மணிகண்டன் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறு மற்றும் ஏற்கனவே உள்ள முன்விரோதம் காரணமாக மணியை அவரது நண்பர்களே ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இனிமேல் நான் எந்த குற்ற சம்பவத்திலும் ஈடுபடமாட்டேன் என்று கூறி விருகம்பாக்கம் போலீசில் மணி எழுதி கொடுத்து விட்டு வந்ததாகவும், அதன் பிறகு கோடம்பாக்கத்தில் நடந்த குற்ற சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க போலீசாருக்கு மணி உதவியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மர்மநபர்கள் மணிகண்டனை வெட்டிக்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story