பின்நோக்கி இயக்கியபோது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி சாவு


பின்நோக்கி இயக்கியபோது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 13 Sep 2018 9:45 PM GMT (Updated: 13 Sep 2018 9:10 PM GMT)

கோத்தகிரி அருகே பின்நோக்கி இயக்கியபோது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கோத்தகிரி, 


கோத்தகிரி அருகே உள்ள கர்சன்வேலி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 57). இவர் அரசு தேயிலை தோட்ட கழகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை 7 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக எஸ்.கைகாட்டி பகுதிக்கு பரமசிவம் வந்தார். அப்போது அங்கு பணியாளர்களை அழைத்துச் செல்லும் தேயிலை தோட்டக்கழக வாகனம் வந்தது. இதை பார்த்த அவர் ஓடிச்சென்றார்.

இந்த நேரத்தில் கெரடாமட்டத்தில் இருந்து விற்பனைக்காக மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையில் திரும்புவதற்காக பின்நோக்கி வந்தது. இதில் எதிர்பாராத விதமாக பரமசிவம் மீது சரக்கு வாகனம் மோதியது. கீழே தவறி விழுந்த பரமசிவத்தின் வயிற்றில் அந்த சரக்கு வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த பரமசிவத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த கெரடாமட்டம் பகுதியை சேர்ந்த பிரபு (35) என்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் பிரபுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story