அனுமதியின்றி வைக்க முயன்ற விநாயகர் சிலை பறிமுதல்


அனுமதியின்றி வைக்க முயன்ற விநாயகர் சிலை பறிமுதல்
x
தினத்தந்தி 13 Sep 2018 9:56 PM GMT (Updated: 13 Sep 2018 9:56 PM GMT)

திண்டுக்கல்லில், அனுமதியின்றி வைக்க முயன்ற விநாயகர் சிலை பறி முதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இந்து முன்னணியினர் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 


நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முக்கியமான இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பது வழக்கம். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 1,183 இடங்களில் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. பிரச்சினைக்குரிய 150 இடங்களில் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கிடையே, திண்டுக்கல் குடைபாறைப்பட்டி கருப்பசாமி கோவில் முன்பு விநாயகர் சிலை வைக்க பொதுமக்கள் அனுமதி பெற்றிருந்தனர். இதேபோல, இந்து முன்னணி சார்பிலும் அங்கு ஒரு சிலை வைக்க அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி அளிக் கப்படவில்லை. இருப்பினும் தடையை மீறி சிலை வைக்க இந்து முன்னணியினர் முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று காலை அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு தயாராக வைத்திருந்த சிலையை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கருப்பசாமி கோவிலில் பிரதிஷ்டை செய்ய தயாரானார்கள். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், காளியம்மன் கோவிலுக்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மோகன்ராஜ், வீரபாண்டி மற்றும் தாசில்தார் லட்சுமி ஆகியோர் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதிக்கப்படாத இடத்தில் சிலை வைக்கக்கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், உடன்பாடு ஏற்படாததால் போலீசார் சிலையை பறிமுதல் செய்ய முயன்றனர். இதனால், இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனே, அங்கிருந்த இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர்கணேஷ், செயலாளர்கள் சஞ்சீவி, பாலசங்கர், வீரதிருமூர்த்தி மற்றும் 4 பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

மேலும், சிலையையும் பறிமுதல் செய்து அங்கிருந்து போலீசார் எடுத்து சென்றனர். பின்னர், போலீசாரே அந்த சிலையை திண்டுக்கல் கோட்டை குளத்துக்கு கொண்டு சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டியில் கரைத்தனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 45 பேரையும் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீசார் அடைத்தனர்.

கைது செய்யும்போது இந்து முன்னணி நிர்வாகி மற்றும் தப்பு அடித்தவர்களை போலீசார் தாக்கியதாக கூறி மண்டபத்திலேயே அனைவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாலை 3.30 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story