கொடைரோடு அருகே லாரி மீது அரசு பஸ் மோதியதில் 15 பேர் காயம்


கொடைரோடு அருகே லாரி மீது அரசு பஸ் மோதியதில் 15 பேர் காயம்
x
தினத்தந்தி 13 Sep 2018 9:30 PM GMT (Updated: 13 Sep 2018 10:02 PM GMT)

கொடைரோடு அருகே லாரி மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொடைரோடு, 


தூத்துக்குடியில் இருந்து மரக்கரியை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி திருப்பூர் நோக்கி சென்றது. இந்த லாரி, திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள தளி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அந்த லாரிக்கு பின்னால் மதுரையில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ் வந்தது. அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனால் மேம்பாலத்தின் இடதுபக்கத்தில் வரிசையாக வாகனங்கள் நின்றன.

இதனால் வலது பக்கமாக செல்வதற்காக லாரியை, டிரைவர் திருப்பினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அரசு பஸ் டிரைவர், உடனே பிரேக் பிடிக்க முயன்றார். அதற்குள் லாரியின் பின்பகுதியில் அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. பஸ்சில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பயணிகளை மீட்டனர்.

இதில் அரசு பஸ் டிரைவரான மதுரையை சேர்ந்த சுரேந்திரன் (வயது 39), கண்டக்டர் சுப்புராஜ், கோவையை சேர்ந்த முத்துப்பாண்டி (33), செந்தில்பிரபு (23), மாசினி (47), அவருடைய மனைவி கவிதா (42), சவுந்தர்யா (19), செந்தில் (42), இசக்கிதுரை (44), திருப்பதிராஜா (37), மைதீன் (35), நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த கோபி (33), சிவஞானய்யா (64), ஜெபமாலாமேரி (47), மதுரை சோழவந்தானை அடுத்த முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த மாது (36) ஆகிய 15 பேர் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் கள் அனைவரும் திண்டுக்கல்லில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அம்மையநாயக் கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story