தினம் ஒரு தகவல் : கண்ணாடியின் கதை


தினம் ஒரு தகவல் : கண்ணாடியின் கதை
x
தினத்தந்தி 14 Sep 2018 8:26 AM GMT (Updated: 14 Sep 2018 8:26 AM GMT)

மனிதன் முதன் முதலாக கண்ணாடியை கண்டுபிடித்தது ஒரு சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வில்தான். இந்த சம்பவம்தான் கண்ணாடி கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக இருந்ததாக பண்டைய ரோமானிய வரலாற்றாசிரியர் பாலினி சொல்கிறார்.

சிரிய கடற்கரை ஓரத்தில் கட்டிட கட்டுமானத்திற்கான கற்களை விற்கும் வியாபாரிகள் சிலர் ஓய்வெடுப்பதற்காக கூடாரம் அமைத்து தங்கினார்கள். பசியாறுவதற்காக சில கற்களை கொண்டு அடுப்பு மூட்டியிருக்கிறார்கள். பிறகு ஏதோ பேச்சு சுவாரஸ்யத்தில் அடுப்பு மூட்டியதையே மறந்துவிட்டனர். அந்த கற்கள் சூடாகி உருகி திரவமாக ஓடி, பளபளப்பாக நிலத்தில் உறைந்துவிட்டது. மிக வினோதமான அந்த பொருளை அவர்கள் விலகி நின்று ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறார்கள். அந்த பொருள்தான் கண்ணாடி உருவாக காரணமாக அமைந்தது என தற்போது சொல்லப்படுகிறது.

செயற்கையான கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டது எப்போது என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. கி.மு.1500-ம் ஆண்டு காலகட்டத்தில் மெசபடோமிய, எகிப்தில் கண்ணாடி பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். சிலிக்கா மணலில் செய்த பாத்திர அச்சுகளை உருகிய கண்ணாடி திரவத்திற்குள் தோய்த்து கண்ணாடிப் பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இம்முறை 500 வருடங்களில் மத்திய தரைக்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளில் பரவி கண்ணாடி தயாரிப்பு தொழில் வெற்றிகரமாக இருந்துள்ளது. ஆனால் கண்ணாடி தயாரிப்புக்கு கடும் உழைப்பும், அதிக பணமும் தேவைப்பட்டன. அதனால் கண்ணாடி விலை உயர்வானதாக இருந்தது. அக்காலகட்டத்தில் கண்ணாடி பொருட்களை மன்னர்களும், பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அறிவியல் வளர்ச்சிதான் இந்த பாகுபாடுகளை களைந்தது எனலாம்.

கண்ணாடி குறித்த மேலும் ஒரு வரலாற்று தகவலும் கூறப்படுகிறது. கி.மு. 27-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஊதுகுழல் கருவி சிரியன் பொறியாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்படுகிறது. ஒரு நீண்ட இரும்புக்குழலின் நுனியைக் கண்ணாடி திரவத்தின் மேல் வைத்து அதன் மறுமுனையில் இருந்து காற்றை ஊதி திரவத்தை அச்சுகளுக்குள் படியவைப்பதுதான் இம்முறை. இந்த யுக்தி கண்ணாடி தயாரிப்பை மிகவும் எளிமையாக்கியது. அதனால் கண்ணாடி விலையும் குறைந்து சாதாரண மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய ஆண்டுகள் வரைக்கும் கால்சியமும் இரும்புத்தாதுக்களும் கலந்த மணல் 1700 சென்டிகிரேடுக்கு மேல சூடாக்கும்போது உண்டாகும் பளபளப்பான திரவத்தை வைத்துதான் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. கி.பி. 1-ம் நூற்றாண்டில் சோடியம் கார்பனேடையும், கால்சியம் கார்பனேடையும் கலந்து உருக்கும் ரசாயன முறை கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அதனுடன் மக்னீசியம் ஆக்ஸைடு சேர்த்ததும் கண்ணாடிக்கு ஒளிபுகும் தன்மை வந்தது. இந்தியாவில் கி.பி. 4-ம் நூற்றாண்டில் இருந்தே கண்ணாடிகள், சில ஆபரணங்களாக புழக்கத்தில் இருந்திருக்கிறது. 

Next Story