கொல்லங்கோடில் சாலையை சீரமைக்க கோரி வணிகர்கள் மறியல் 85 பேர் கைது


கொல்லங்கோடில் சாலையை சீரமைக்க கோரி வணிகர்கள் மறியல் 85 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sep 2018 10:45 PM GMT (Updated: 14 Sep 2018 6:50 PM GMT)

கொல்லங்கோடில் சாலையை சீரமைக்க கோரி வணிகர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 85 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு பகுதியில் மேடவிளாகம் முதல் ஊரம்பு வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இந்த சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால் குண்டும், குழியுமாகி அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் இடமாக மாறி விட்டது. மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் வெகுநாட்களாக தேங்கி சுகாதார சீர்கேடு நிலையும் ஏற்பட்டது.

மேலும் வெயில் காலங்களில் புழுதி பறக்கும் சாலையாகவும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டும் அல்லாமல் அந்த பகுதியில் தொழில் செய்யக்கூடிய வணிகர்களும் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த நிலையில் சாலையை சீரமைக்கக்கோரி கொல்லங்கோடு தொழில் வர்த்தக சங்கத்தினர் சார்பில் கண்ணனாகம் சந்திப்பில் நேற்று காலை வர்த்தக சங்க தலைவர் கோபன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இதில் கொல்லங்கோடு தொழில் வர்த்தக சங்க செயலாளர் ஹரிகுமார், துணை தலைவர் தாமோதரன், பொருளாளர் சதீசன் நாயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை குமரி மேற்கு மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அல் அமீன் தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகனன், கொல்லங்கோடு பகுதி பா.ஜ.க. தலைவர் ஸ்ரீகண்டன் தம்பி, ஏழுதேசம் வணிகர் சங்க தலைவர் தாஸ், ஊரம்பு பகுதி வர்த்தக சங்க தலைவர் வர்க்கீஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

திடீரென போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடுமாறு கேட்டார். ஆனால் அவர்கள் மறியலை கைவிடவில்லை. இதனால் போலீசார் மறியலில் ஈடுபட்டதாக 85 பேரை கைது செய்து அந்த பகுதியில் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே மண்டபத்தில் போராட்டக்காரர்கள் இருந்த போது, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் கொல்லங்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story