குன்னூரில் மதுக்கடையை அகற்றக்கோரி த.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


குன்னூரில் மதுக்கடையை அகற்றக்கோரி த.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:00 PM GMT (Updated: 14 Sep 2018 6:55 PM GMT)

குன்னூர் மவுண்ட் ரோடு அருகே மதுக்கடையை அகற்றக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குன்னூர்,

குன்னூர் மவுண்ட் ரோடு அருகே சின்ன பள்ளிவாசலுக்கு செல்லும் வழியில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையை அகற்றக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் ஹைதர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அஸ்கர், துணை செயலாளர் ஹாரிபுல்லாஹ், நகர தலைவர் ரசூல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 ஆர்ப்பாட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதன்பின்னர் ஹைதர் அலி நிருபர்களிடம் கூறும்போது, இங்குள்ள குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுக்கடை உள்ளது. மதுக்கடைக்கு வருபவர்கள் குடிபோதையில் கல்லூரி மாணவ– மாணவிகள் உள்பட பொதுமக்களிடம் தகராறு செய்வது வாடிக்கையாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி அந்த மதுக்கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றார்.


Next Story