பந்தலூர் அருகே அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை


பந்தலூர் அருகே அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2018 10:00 PM GMT (Updated: 14 Sep 2018 6:57 PM GMT)

பந்தலூர் அருகே அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பந்தலூர்,

பந்தலூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர், அட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் வீடுகளில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து வருகின்றனர். மேலும் வீதிகளில் தெருநாய்களும் சுற்றித்திரிகின்றன.

இந்த நிலையில் இரவு நேரத்தில் ஊருக்குள் நுழையும் சிறுத்தைப்புலி ஒன்று, கால்நடைகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். நகருக்குள் நுழைந்த அதே சிறுத்தைப்புலி தெருநாய்களை அடித்து வனப்பகுதிக்குள் இழுத்து சென்றுள்ளது. மேலும் அங்குள்ள ஸ்ரீகாந்த் என்பவரது வீட்டில் கோழி கூண்டை உடைத்து, கோழிகளை தாக்கியுள்ளது. சத்தம் கேட்டு அவர் வெளியே வந்து பார்த்தபோது, கோழி கூண்டில் இருந்து சிறுத்தைப்புலி தப்பி வனப்பகுதிக்குள் பாய்ந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

இரவு நேரத்தில் ஊருக்குள் நுழையும் சிறுத்தைப்புலியால் பீதியுடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தி வனத்துறைக்கு பலமுறை புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அந்த சிறுத்தைப்புலியின் அட்டகாசம் மேலும் அதிகரித்து உள்ளது. பகல் நேரத்திலும் ஊருக்குள் நுழையும் அபாயம் உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு குழந்தைகள் சென்றுவிட்டு, வீடு திரும்பும் வரை பெற்றோர் கலக்கத்துடன் காத்திருக்க வேண்டியுள்ளது. கால்நடைகளை சிறுத்தைப்புலி அடித்து கொன்று வருவதால், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே அதற்கு இழப்பீடு வழங்கவும், அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்கவும் வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story