விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பில் உள்ளது - கலெக்டர் வீரராகவராவ்


விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பில் உள்ளது - கலெக்டர் வீரராகவராவ்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:45 PM GMT (Updated: 14 Sep 2018 7:14 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

 ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் சாகுபடி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் நயினார்கோவில் ஆகிய வட்டாரங்களில் ஒருசில கிராமங்களில் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது நிலவி வரும் பருவ சூழ்நிலை காரணமாக அநேக கிராமங்களில் பயிர் சாகுபடி செய்திட உழவுபணிகளும் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான முக்கிய வோளாண் இடுபொருட்களான ரசாயன உரங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது யூரியா 2015 டன், டி.ஏ.பி– 841 டன், பொட்டாஷ் 135 டன், கலப்பு உரங்கள் 826 டன், சூப்பர் பாஸ்பேட் 30 டன் என மொத்தம் 3 ஆயிரத்து 847 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்வதை கண்காணிக்க 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் மாவட்டத்தில் உள்ள உர விற்பனை மையங்களை ஆய்வு செய்து உர இருப்பு விவரம் மற்றும் விற்பனை விலையினை தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அறிவுறுத்தினர்.

மேலும் யூரியா 45 கிலோ மூடை அதிகபட்ச விலை ரூ.266.50 எனவும், டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள் மூடைகளில் அச்சடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமலும் விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாட்டு சட்டம்–1985 உட்பட்டு உரங்களை விற்பனை செய்ய வேண்டும். இந்த சட்டத்தினை மீறுபவர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985–ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story