மாவட்டம் முழுவதும் தொடர் மின்வெட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மாவட்டம் முழுவதும் தொடர் மின்வெட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:15 PM GMT (Updated: 14 Sep 2018 7:16 PM GMT)

தர்மபுரி மாவட்டம் முழுவதும் தொடர் மின்வெட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், மாவட்ட பொருளாளர் தர்மசெல்வன், மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தொடர் மின்வெட்டை தடுத்து சீரான மின்வினியோகத்தை உறுதிபடுத்த வேண்டும். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செல்லும் உபரி நீரை மாவட்ட ஏரிகளுக்கு திருப்பிவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவிற்கு தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக சென்று பங்கேற்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரையும் சேர்க்க கட்சி நிர்வாகிகள் உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில நிர்வாகி ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, நகர செயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், கோபால், செல்வராஜ், சித்தார்த்தன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அமைப்பு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நன்றி கூறினார்.

Next Story