சென்னையில் வெள்ளநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னையில் வெள்ளநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:45 PM GMT (Updated: 14 Sep 2018 7:44 PM GMT)

சென்னையில் வெள்ளநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்களுக்கும் குறைவான கால அவகாசமே இருக்கும் நிலையில் சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் இன்னும் பாதியளவுகூட முடிவடையவில்லை. 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தில் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக் காதது கண்டிக்கத்தக்கது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1,850 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் தூர்வாரி, சீரமைக்கப்பட வேண்டும். ஆனால், இவற்றில் பாதியளவுக்குக்கூட இன்னும் சரி செய்யப்படவில்லை. பல இடங்களில் இப்போது தான் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மழைநீர் வடிகால் பணிகள் பருவமழை தொடங்குவதற்குள் முடிவடைந்துவிடும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்துள்ள போதிலும் அது சாத்தியமானதாகத் தோன்றவில்லை.

கோர்ட்டை அவமதிக்கும் செயல்

மழைநீர் வடிகால்களைவிட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை ஆக்கிரமிப்புகள் தான். பாரம்பரியமாக நீர் வடியும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழைநீர் வடிய வாய்ப்பே இல்லை. சென்னையில் அரை மணி நேரம் மழை பெய்தால்கூட முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு காரணம் இந்த ஆக்கிரமிப்புகள் தான். இவற்றை அகற்றும்படி சென்னை ஐகோர்ட்டு பலமுறை ஆணையிட்ட பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது ஐகோர்ட்டை அவமதிக் கும் செயலாகும்.

சென்னை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்கள் தான் இந்த அனைத்து சீரழிவுக்கும் காரணம் ஆகும். இந்த ஊழல்கள் பேரழிவை ஏற் படுத்தி விடும். எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இனியும் உறங்கி கொண்டிருக்காமல் விழித்துக்கொள்ள வேண்டும். வெள்ளநீர் வடிகால்களை சீரமைத்தல், மழைநீர் வடியும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story