பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:00 PM GMT (Updated: 14 Sep 2018 7:48 PM GMT)

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை போர்வெல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வலியுறுத்தியும் சென்னை போர்வெல் லாரி (ஆழ்துளை கிணறு தோண்டும் லாரி) உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த போர்வெல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் முடிச்சூர் அருகே உள்ள கரிசங்காலில் சுமார் 260-க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. போர்வெல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் போர் போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை போர்வெல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் டி.குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளோம். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை குறைப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அடுத்தகட்டமாக எந்த மாதிரியான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்பது குறித்து எங்களுடைய சங்கத்தினரோடு கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story