மைசூரு தசரா விழா சின்னம் வெளியீடு 3 மந்திரிகள் பங்கேற்பு


மைசூரு தசரா விழா சின்னம் வெளியீடு 3 மந்திரிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Sep 2018 10:30 PM GMT (Updated: 14 Sep 2018 9:00 PM GMT)

மைசூரு தசரா விழாவுக்கான சின்னம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 3 மந்திரிகள் பங்கேற்றனர்.

மைசூரு, 

மைசூரு தசரா விழாவுக்கான சின்னம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 3 மந்திரிகள் பங்கேற்றனர்.

தசரா கமிட்டி செயற்குழு

மைசூரு தசரா விழாவை நடத்த தசரா கமிட்டி அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் மந்திரி ஜி.டி.தேவேகவுடா, கலெக்டர் அபிராம் ஜி. சங்கர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளனர். இதில் கமிட்டி தலைவராக ஜி.டி.தேவே கவுடா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தசரா கமிட்டியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தசரா விழா, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், மலர் கண்காட்சி, பொருட்காட்சி உள்ளிட்டவை நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

வாக்குவாதம்

கூட்டம் தொடங்கியதும், சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரி புட்டரங்கஷெட்டி தன்னை தசரா கமிட்டி துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புட்டரங்கஷெட்டிக்கும், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மந்திரி ஜி.டி.ேதவேகவுடா அவர்களை சமாதானப்படுத்தினார். மேலும் மந்திரி புட்டரங்கஷெட்டியை தசரா கமிட்டி துணைத் தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்பிறகு தசரா கமிட்டி செயற்குழு கூட்டம் சுமுகமாக நடந்தது. ஆனால் கூட்டத்தில் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தன்வீர்சேட், யதீந்திரா சித்தராமையா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிட த்தக்கது.

தசரா சின்னம் வெளியீடு

அதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தசரா விழாவுக்கான சின்னம் வெளியிடப்பட்டது. மேலும் சுவரொட்டி, இணையதள முகவரியும் வெளியிடப்பட்டது. இவற்றை மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ், புட்டரங்கஷெட்டி, கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் ஆகியோர் வெளியிட்டனர்.

இதில் மாநகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணீஸஷ்வரர்ராவ், அரண்மனை வாரிய இயக்குனர் சுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story