கும்மிடிப்பூண்டி அருகே இரு தரப்பினரிடையே மோதல்; 6 பேர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே இரு தரப்பினரிடையே மோதல்; 6 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sep 2018 10:45 PM GMT (Updated: 14 Sep 2018 9:05 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த தேவம்பேடு அருகே உள்ளது காட்டுக்குளம் கிராமம். இங்கு வசித்து வருபவர் மோகன் (வயது 36). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயியான தயாளன்(53) என்பவருக்கும் இடையே ஏற்கனவே நிலம் தொடர்பான வழி பிரச்சினையில் மோதல் இருந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று மோகன் தரப்பை சேர்ந்தவர்களுக்கும், தயாளன் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் உருட்டுக் கட்டையால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

6 பேர் கைது

இந்த மோதலில் மோகன் தரப்பில் மோகன், குமார் (48), இளங்கோவன் (24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அதே போல தயாளன் தரப்பை சேர்ந்த ஆறுமுகம் (36), குமரேசன் (39), வாசு (43), தினேஷ் (22) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் தினேசும், குமரரேசனும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 5 பேர் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக் குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பையும் சேர்ந்த நாகராஜ் (22), சிவா (25), சீனிவாசன் (38), பிரதாப் (23), ஜீவா (28), சுபாஷ் (27) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story