அன்னவாசல் அருகே கல்குவாரி வெடி விபத்தில் மேலும் ஒருவர் சாவு


அன்னவாசல் அருகே கல்குவாரி வெடி விபத்தில் மேலும் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 14 Sep 2018 10:19 PM GMT (Updated: 14 Sep 2018 10:19 PM GMT)

அன்னவாசல் அருகே கல்குவாரியில் வெடி வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மேலூரை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 41). இவருக்கு சொந்தமான கல்குவாரி முத்துடையான்பட்டியில் உள்ளது. இங்கு பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு, ஜல்லி மற்றும் பாறாங்கற்களாக அனுப்பப்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த கல்குவாரியில் முத்துடையான்பட்டியை சேர்ந்த ஆறுமுகம்(50) மேலாளராக வேலை பார்த்தார். இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி மாலை பாறைகளை உடைப்பதற்காக சக்திவாய்ந்த வெடிகள் வைக்கப்பட்டன. அதன்பிறகு தொழிலாளர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குவாரிக்கு வந்த ஆறுமுகம், கல்குவாரியில் வைத்த வெடிகள் அனைத்தும் வெடித்து விட்டதா? என பார்வையிட்டார். வெடிக்காத ஒரு வெடியை கையில் எடுத்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு அருகில் 4 தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் கையில் இருந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

மேலும் அருகில் இருந்த கூலி தொழிலாளர்கள் வருதாவயலை சேர்ந்த பழனிவேல் (60), குருக்கத்தான்பட்டியை சேர்ந்த சண்முகம் (34), தட்டாம்பட்டியை சேர்ந்த கணேசன் (40), திருச்சி துவாக்குடி அண்ணாவளைவு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (33) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள், உடனடியாக வெள்ளனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலாளர் ஆறுமுகத்தின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனிவேல் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மற்ற 3 பேரும் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story