இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு


இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு
x
தினத்தந்தி 14 Sep 2018 10:28 PM GMT (Updated: 14 Sep 2018 10:28 PM GMT)

தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடந்த இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப் பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களின் தமிழ் புலமையை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் கட்டுரை, கவிதை, பேச்சு ஆகிய இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த கல்வி ஆண்டுக்கான போட்டிகள் கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி அரங்கில் நேற்று நடந்தது. இதில் கல்லூரியின் முதல்வர் ஜோதிவெங்கடேஷ்வரன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் “தன்னிகரில்லா தமிழ்“ என்கிற தலைப்பில் கட்டுரை படைப்புகளையும், “உனக்குள் நீ“ என்கிற தலைப்பில் கவிதை தொகுப்பினையும் மாணவ- மாணவிகள் எழுதி கொடுத்து சமர்ப்பித்தனர்.

மேலும் மலையாளம் உள்ளிட்ட பிறமொழிகளின் ஆக்கத்திற்கு உறுதுணையாக உள்ள தமிழ்மொழியின் சிறப்பு பற்றி பேச்சு போட்டியில் மாணவர்கள் எடுத்துரைத்தனர். பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர், தமிழ் மொழி மீதான ஆர்வம், சிந்தனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். அதன் பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அன்புசெழியன், தமிழ்துறை தலைவர் மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story