16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரிடம் விசாரணை சமூகநலத்துறை நடவடிக்கை


16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரிடம் விசாரணை சமூகநலத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2018 10:44 PM GMT (Updated: 14 Sep 2018 10:44 PM GMT)

திருப்பூர் பகுதியில் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு நடவடிக்கையில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் அருகே உள்ள ஒரு பகுதியில் 16 வயது சிறுமிக்கு 35 வயது வாலிபருடன் திருமணம் நடைபெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சிறுமியின் திருமணம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தினார்கள். இந்த நிலையில் அதே சிறுமிக்கு நேற்று திருமணம் முடிந்து விட்டதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளுக்கு தெரியாமல் சட்டவிதிகளை மீறி சிறுமியை வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க அவினாசி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சமூகநலத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதன்படி சிறுமியின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணம் செய்து கொடுக்கப்பட்ட சிறுமியை வாலிபரிடம் இருந்து பிரித்து காப்பகத்தில் ஓப்படைத்தனர். இதுபோல மடத்துக்குளம் பகுதியில் 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story