மொண்டிபாளையம் பெருமாள்கோவிலில் புரட்டாசி திருவிழா இன்று தொடங்குகிறது


மொண்டிபாளையம் பெருமாள்கோவிலில் புரட்டாசி திருவிழா இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 14 Sep 2018 11:28 PM GMT (Updated: 14 Sep 2018 11:28 PM GMT)

மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது.

சேவூர்,

சேவூர் அருகே மொண்டிபாளையத்தில் ‘மேலத்திருப்பதி’ என்றழைக்கப்படும், வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மேலும் இந்த கோவில் ஊஞ்சல்வனம், சீனிவாசபுரம் என்றெல்லாம் போற்றப்படுகிறது. திருப்பதி பெருமாளுக்கு ஒருவர் நேர்த்திக்கடன் நேர்ந்து கொண்டு, அவரால் திருப்பதிக்கு செல்லமுடியவில்லை என்றால், இந்த கோவிலில் அந்த நேர்த்திக்கடனை செலுத்தலாம் என்பது ஐதீகம்.

இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி திருவிழா 5 சனிக்கிழமைகள் நடைபெறும். இந்த திருவிழாவில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

புரட்டாசி திருவிழா

அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து புரட்டாசி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இந்த திருவிழா நடைபெறும். இதையொட்டி சனிக்கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு கருட வாகனத்தில் வெங்கடேச பெருமாள் திருவீதி உலா நடைபெறும்.

இதையொட்டி, கோவை, அன்னூர், அவினாசி, திருப்பூர், நம்பியூர் மற்றும் புளியம்பட்டியிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகிறார்கள்.

Next Story