ஆட்சியை கவிழ்க்க முயற்சி என்ற குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும்


ஆட்சியை கவிழ்க்க முயற்சி என்ற குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:30 PM GMT (Updated: 15 Sep 2018 6:25 PM GMT)

ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாக கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு, 

ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாக கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

ஆட்சியை கவிழ்க்க முயற்சி

பா.ஜனதா எம்.எல்.சி.க்கள் ரவிக்குமார், ஆயனூர் மஞ்சுநாத், அஸ்வத் நாராயணா மற்றும் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. ஆகியோர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறி இருக்கிறார். லாட்டரி மோசடி மூலம் பணத்தை சேகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா பொறுப்பு இல்லை

ரியல் எஸ்டேட், லாட்டரி மோசடிகள் நடந்தால் அதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. அதற்கு பதிலாக வெறும் குற்றச்சாட்டுகளை குமாரசாமி கூறுகிறார். நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும்.

முதல்-மந்திரி குமாரசாமி நேற்று(நேற்று முன்தினம்) பேட்டி அளிக்கையில் அரசை கவிழ்க்க முயற்சி செய்பவர்கள் யார்-யார் என்பது எனக்கு தெரியும் என்று கூறினார். இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு பா.ஜனதா ெபாறுப்பு இல்லை. கூட்டணி ஆட்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதற்கு உங்களின் உட்கட்சி மோதலே காரணம்.

சண்டை போட்டால்...

கூட்டணி ஆட்சி அமைந்தநாளில் இருந்தே பிரச்சினை இருக்கிறது. இந்த அரசும் இருந்தும் செத்தது போல் உள்ளது. நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்பதற்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்றும் நிலக்கடலை சாப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை. நாங்கள் அரசியல் செய்கிறோம்.

மந்திரி எச்.டி.ரேவண்ணா அரசு ஊழியர்கள் பணி இடமாற்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, லட்சுமி ஹெப்பால்கர் சண்டை போட்டால் அதற்கு பா.ஜனதா காரணமா?. முதல்-மந்திரியின் பார்வையில் ஆட்சியை கவிழ்க்க முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராஜினாமா செய்ய வேண்டும்

இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹிட் அன்ட் ரன்(மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிடுதல்) குமாரசாமி, 104 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கன்னடர்களின் ஆதரவை பெற்றுள்ள எடியூரப்பாவே உண்மையான ‘கிங்’ ஆவார். நீங்கள் குற்றச்சாட்டு கூறியிருப்பது உங்களை சுற்றியுள்ள மந்திரிகளை தான்.

முதல்-மந்திரி பதவியில் இருந்து கொண்டு பொறுப்புடன் பேச வேண்டும். ஆட்சி கவிழ்ப்பு விஷயத்தில் நீங்கள் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி பதவியை ராஜினமா செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story