வருமான வரி ஏய்ப்பு வழக்கில் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவு


வருமான வரி ஏய்ப்பு வழக்கில் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Sep 2018 10:30 PM GMT (Updated: 15 Sep 2018 6:35 PM GMT)

வருமான வரி ஏய்ப்பு வழக்கில் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பெங்களூரு, 

வருமான வரி ஏய்ப்பு வழக்கில் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மாநிலங்களவை தேர்தல்

கர்நாடக நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். காங்கிரஸ் கட்சியில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். கடந்த ஆண்டு(2017) குஜராத் மாநிலத்தில், மாநிலங்களவை ேதர்தல் நடந்தது.

இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவதை தடுக்கும் நோக்கத்தில் அவர்கள் ெபங்களூருவில் உள்ள ஒரு ரெசார்ட் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை பாதுகாக்கும் பணி மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் மேலிடம் வழங்கியது.

ரூ.8.59 கோடி சிக்கியது

அந்த நேரத்தில் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது நாட்டிலேயே நடைபெற்ற மிகப்பெரிய அளவிலான வருமான வரி சோதனை என்று பேசப்பட்டது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டில் ரூ.8.59 கோடி ரொக்கம் சிக்கியதாக வருமான வரித்துறை கூறியது. இதுகுறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 5 ேபரும் திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நிபந்தனை முன்ஜாமீன்

இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேரும் மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்று அவர்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முழு அளவிலான முன்ஜாமீன் வழங்குமாறு டி.கே.சிவக்குமார் கோரினார். அதன் மீது விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி எம்.எஸ்.ஆல்வா உத்தரவிட்டார். தலா ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.1 லட்சத்திற்கான பத்திரத்தை உத்தரவாதமாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, மந்திரி கோர்ட்டில் ஆஜராகி இருந்தார்.

Next Story