வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் - பொதுமக்களுக்கு நாராயணசாமி வேண்டுகோள்


வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் - பொதுமக்களுக்கு நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:45 PM GMT (Updated: 15 Sep 2018 7:32 PM GMT)

பொதுமக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

சர்வதேச கடலோர தூய்மை தினம் நேற்று முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று காலை புதுவை கடற்கரை காந்தி திடல் அருகே நடந்தது. விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு கடலோர தூய்மை தினத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

கடல் வளத்தை பேணிக்காப்பது நமது அனைவரின் கடமை. நமது பகுதியை சுத்தமாக வைத்திருப்பதால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும். பாலித்தீன் பைகளை தடை செய்வதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமாக வாழ முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் கடற்கரை பகுதியில் கிடந்த குப்பைகளை சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் கடலோர கடற்படை கமாண்டன்ட் தியாகி, உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்க்கண்ணன், சுற்றுலாத்துறை இயக்குனர் முகமது மன்சூர், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுதாகர் மற்றும் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள், மகளிர் குழுவினர், துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டு குப்பைகளை சேகரித்தனர்.

முன்னதாக கடற்கரை தூய்மை அவசியம் குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதேபோல் புதுவையில் காலாப்பட்டு முதல் புதுக்குப்பம் வரை தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


Next Story