பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சியால் சிக்கினர்


பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சியால் சிக்கினர்
x
தினத்தந்தி 15 Sep 2018 9:30 PM GMT (Updated: 15 Sep 2018 7:33 PM GMT)

பெட்ரோல் போட்டதற்கு காசு கேட்டதால் ஆத்திரம் அடைந்து பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த தீயம்பாக்கம் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 58). கண்ணம்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார்.

பெட்ரோல் பங்க்கிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் போட்டனர். பெட்ரோலுக்கு பணம் கேட்டபோது ஆத்திரம் அடைந்து 3 வாலிபர்களும் ராஜாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

3 பேர் கைது

இதுகுறித்து ராஜா செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பெட்ரோல் பங்க்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தார்.

அப்போது ராஜாவை தாக்கியது செங்குன்றத்தை அடுத்த சிருங்காவூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த கோபிநாத் (19), கதிர் (19) மற்றும் பிரவீன்குமார் (19) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையே ராஜாவை வாலிபர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story