சொத்து பிரச்சினையில் மனைவி, மாமனாரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை மகள்கள் சாட்சியின் அடிப்படையில் தீர்ப்பு


சொத்து பிரச்சினையில் மனைவி, மாமனாரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை மகள்கள் சாட்சியின் அடிப்படையில் தீர்ப்பு
x
தினத்தந்தி 15 Sep 2018 10:30 PM GMT (Updated: 15 Sep 2018 11:45 PM GMT)

சொத்து பிரச்சினையில் மனைவி, மாமனாரை கத்தியால் குத்தி கொன்றவருக்கு, மகள்களின் சாட்சியத்தின் அடிப்படையில் உஸ்மனாபாத் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அவுரங்காபாத், 

சொத்து பிரச்சினையில் மனைவி, மாமனாரை கத்தியால் குத்தி கொன்றவருக்கு, மகள்களின் சாட்சியத்தின் அடிப்படையில் உஸ்மனாபாத் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொலை

உஸ்மனாபாத்தை சேர்ந்தவர் சிவாஜி சாகேப்ராவ்(வயது40). இவரது மனைவி சுரேகா முக்தே(36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன், மனைவி இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதை வைத்து சுரேகா முக்தேவை, சிவாஜி சாகேப்ராவ் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சுரேகா முக்தே தனது தந்தை லிம்பாராஜ் கன்காலே(60) வீட்டில் தனது மகள்களுடன் சென்று தங்கினார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அங்கு சென்ற சிவாஜி சாகேப்ராவ், மகள்களின் கண் முன்னே மனைவியையும், மாமனாரையும் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.

மகள்கள் சாட்சி

இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாஜி சாகேப்ராவை கைது செய்து, உஸ்மனாபாத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது, சிவாஜி சாகேப்ராவுக்கு எதிராக சாட்சி அளித்த அவரது மகள்கள், “சம்பவத்தன்று தங்களது தாத்தா வீட்டிற்கு வந்த தந்தை சிவாஜி சாகேப்ராவ், சொத்து பத்திரத்தை கேட்டு தாய் சுரேகா முக்தேவை துன்புறுத்தியதாகவும், ஆனால் பத்திரத்தை கொடுக்க மறுத்துவிட்ட ஆத்திரத்தில் அவரை குத்தி கொலை செய்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தடுக்க வந்த தாத்தா லிம்பாரா கன்காலேவையும் தந்தை குத்தி கொன்றதாக கூறினர்.

இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட சிவாஜி சாகேப்ராவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story