கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 1,783 விநாயகர் சிலைகள் கரைப்பு


கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 1,783 விநாயகர் சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 15 Sep 2018 10:15 PM GMT (Updated: 15 Sep 2018 9:38 PM GMT)

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 1,783 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் சார்பில் வழிபட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணை, தளி ஏரி, கவுரம்மா ஏரி, பிலிகுண்டு ஏரி, தென்பெண்ணை ஆறு, கர்னூர் ஏரி, அச்செட்டிப்பள்ளி ஏரி, சின்னபென்னங்கூர் ஏரி, பட்டாளம்மன் ஏரி, கவீஸ்வரர் குளம், கும்மனூர் ஆறு, கீழ்புதூர் ஏரி, பாரூர் ஏரி மற்றும் பாம்பாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கிருஷ்ணகிரி, பர்கூர், மகாராஜகடை, காவேரிப்பட்டணம், கந்திகுப்பம் மற்றும் ராயக்கோட்டை போலீஸ் நிலைய எல்லையில் விநாயகர் சிலைகளை வைத்திருந்தவர்கள் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்த 3-வது நாளான நேற்று ஊர்வலமாக வாகனங்களில் மேளதாளத்துடன் எடுத்து வந்து கிருஷ்ணகிரி அணையின் மேற்பகுதியில் உள்ள தண்ணீரில் கரைத்தனர். அதன்படி நேற்று ஒரு நாளில் மட்டும் 477 விநாயகர் சிலைகள் கிருஷ்ணகிரி அணையில் கரைக்கப்பட்டன. இதையொட்டி கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வேப்பனப்பள்ளி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர்.

இந்த சிலைகளுக்கு 3 நாட்களும் சிறப்பு பூஜை செய்யப்பட்டன. வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகளை நேற்று இளைஞர்கள் ஊர்வலமாக வாகனங்களில் எடுத்து சென்றனர். வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஏரியில் சிலைகள் கரைக்கப்பட்டன.

இதையொட்டி வேப்பனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேப்பனப்பள்ளியில் நேற்று 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை எதிரே காவிரி ஆற்றில் 942 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கிரேன் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஏரியூர் அருகே நாகமரை, பூச்சூர் பகுதியில் காவிரி ஆற்றில் 122 விநாயகர் சிலைகளும், நாகாவதி அணை, தொப்பையாறு பகுதியில் 192 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. இதேபோல தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,256 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 1,783 சிலைகள் கரைக்கப்பட்டன.

Next Story