வள்ளியூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


வள்ளியூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 16 Sep 2018 10:00 PM GMT (Updated: 16 Sep 2018 7:11 PM GMT)

வள்ளியூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வள்ளியூர், 

வள்ளியூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரை சேர்ந்தவர் தங்கராஜா (வயது 45). இவரது மகள் ராஜமஞ்சு (27). இவருக்கும் வள்ளியூர் அருகே உள்ள தங்கயத்தைச் சேர்ந்த மகாராஜா மகன் முத்துகிருஷ்ணன் (31) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ராஜ ரோஷன், ராஜரக்‌ஷன் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜமஞ்சு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உடனடியாக வள்ளியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜமஞ்சு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த நிலையில் மகள் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தங்கராஜா, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து வள்ளியூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் தனது மகளை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கராஜா புகார் மனு கொடுத்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மற்றொரு சம்பவம்

களக்காடு அருகே உள்ள தேவநல்லூரை சேர்ந்தவர் சிவகுமார். அவருடைய மனைவி பேபிசாலினி (24). இவர் கிராம பஞ்சாயத்து பகுதியில் நடைபெறுகின்ற வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு ஒரு மகன் உள்ளான்.

பேபி சாலினி, அங்குள்ள குளத்துக்கு வேலைக்கு சென்று இருந்தார். அப்போது இவருடன் வேலை பார்த்த சிலர் பேபி சாலினியை அவதூறாகவும், கேலி கிண்டலாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பேபிசாலினி பரிதாபமாக இறந்தார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த பேபிசாலினிக்கு திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் மைதிலி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story