மானூர் அருகே மணப்பெண் வீட்டில் மகனால் தாக்கப்பட்ட தந்தை சாவு கொலை வழக்காக மாற்றம்


மானூர் அருகே மணப்பெண் வீட்டில் மகனால் தாக்கப்பட்ட தந்தை சாவு கொலை வழக்காக மாற்றம்
x
தினத்தந்தி 16 Sep 2018 9:00 PM GMT (Updated: 16 Sep 2018 7:44 PM GMT)

மானூர் அருகே, மணப்பெண் வீட்டில் மகனால் தாக்கப்பட்ட தந்தை இறந்தார். இதையடுத்து இந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

மானூர், 

மானூர் அருகே, மணப்பெண் வீட்டில் மகனால் தாக்கப்பட்ட தந்தை இறந்தார். இதையடுத்து இந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

மகனால் தாக்கப்பட்ட தந்தை

மானூர் அருகே உள்ள வி.ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 47). கூலி தொழிலாளி. அவருடைய மகன் சுடலை மணி (21). இவருக்கு அழகியபாண்டியபுரத்தில் உள்ள உறவினர் பெண்ணை திருமணத்துக்கு பேசி முடித்தனர். இதனை உறுதி செய்யும் நிகழ்ச்சிக்கு அழகியபாண்டியபுரம் மணமகள் வீட்டுக்கு தங்கராஜ், அவருடைய மனைவி வள்ளியம்மாள், மணமகன் சுடலைமணி மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் தங்கராஜ் மதுபோதையில் சுடலைமணியை உறவினர்கள் முன்னிலையில் அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுடலைமணி, அருகில் கிடந்த கம்பால் தங்கராஜின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சாவு

இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமணியை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதையடுத்து மானூர் போலீசார் ஏற்கனவே பதிவு செய்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story