மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோலை வழங்கிய நண்பர்கள்


மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோலை வழங்கிய நண்பர்கள்
x
தினத்தந்தி 16 Sep 2018 9:30 PM GMT (Updated: 16 Sep 2018 9:22 PM GMT)

காட்டுமன்னார்கோவில், கடலூரில் நடந்த திருமண விழாவில் மணமக்களுக்கு அவர்களின் நண்பர்கள் பரிசாக பெட்ரோலை வழங்கினர். இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

காட்டுமன்னார்கோவில்,


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழபருத்திக்குடியை சேர்ந்தவர் ராமலிங்கம்-சகுந்தலா தம்பதியின் மகன் இளஞ்செழியனுக்கும், நாகை மாவட்டம் செம்மியவழுர் ரவிச்சந்திரன்-மலர்கொடி தம்பதியின் மகள் கனிமொழிக்கும் குமராட்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.

இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினார்கள்.

அப்போது மணமகனின் நண்பர்கள் சிலர் மணமக்களிடம் பிளாஸ்டிக் கேனில் 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர். இதை மணமக்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

பொதுவாக திருமண விழாவில், மணமக்களுக்கு பரிசு பொருட்கள், மொய் பணம் ஆகியவற்றை தான் வழங்குவார்கள். ஆனால் தற்போது பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை நெருங்கி வருவதால் பெட்ரோலை பரிசாக அளித்த சம்பவம் மணவிழாவுக்கு வந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த நிமிடம் முதல் நெட்டிசன்கள் ‘மீம்ஸ்’களை பறக்க விட்டனர். இதனால் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் என்று எங்கும் இந்த மணமக்களின் ‘மீம்ஸ்’கள் தான் நிரம்பி வழிந்தன. ஏற்கனவே மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, திருமண விழாக்களில் மொய்பணம் ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் வசூலிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது மணமக்களுக்கு பெட்ரோலை நண்பர்கள் பரிசாக வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் கடலூரில் நடந்த திருமண விழாவிலும் மணமக்களுக்கு நண்பர்கள் பரிசாக பெட்ரோலை வழங்கி உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் குப்பன்குளத்தை சேர்ந்தவர் பிரபு. ஆட்டோ டிரைவரான இவருக்கும், ஆல்பேட்டையை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் நேற்று காலையில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடலூர் தேரடி தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில் பிரபுவின் நண்பர்களான ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து 4 லிட்டர் பெட்ரோலை பரிசாக மணமக்களுக்கு வழங்கினர்.

இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்ட செல்கிறது. கடலூரில் இன்று(நேற்று) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.02-க்கும், டீசல் ரூ.79.66-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருப்பதால் விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை எட்டிவிடும் என்று நினைக்கிறோம். நாங்கள் அனைவரும் பெட்ரோலால் ஓடும் ஆட்டோவை ஓட்டி வருகிறோம். எனவே பெட்ரோல் விலை உயர்வை குறைக்கவும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் 4 லிட்டர் பெட்ரோலை வாங்கி மணமக்களுக்கு பரிசாக அளித்தோம் என்றனர். 

Next Story