சிவகாசியில் குடோனில் பதுக்கிய ரூ.40 லட்சம் பட்டாசுகள் பறிமுதல், உரிமையாளர் கைது


சிவகாசியில் குடோனில் பதுக்கிய ரூ.40 லட்சம் பட்டாசுகள் பறிமுதல், உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 17 Sep 2018 11:00 PM GMT (Updated: 17 Sep 2018 7:58 PM GMT)

சிவகாசி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி,

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இயங்கி வரும் தனியார் குடோன்களில் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை பண்டல், பண்டலாக சிலர் பதுக்கி வைத்து இருப்பதாகவும், இதனால் விபத்து ஏற்பட்டால் அதிகஅளவில் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வருவாய்த்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்த நிலையில் சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜாவுக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் அவர் நாரணாபுரம் கண்ணாநகரில் உள்ள சில பட்டாசு கடைகளில் திடீர் ஆய்வு செய்தார். அதில் அருண்குமார் (வயது 48) என்பவருக்கு சொந்தமான கடையில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் கடையின் அருகில் இருந்த காலி இடத்தில் குடோன் அமைத்து அதில் ஏராளமான பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கடை மற்றும் குடோனில் இருந்த பட்டாசுகளை அளவிடு செய்ய தாலுகாவின் பல்வேறு பகுதியில் பணியாற்றும் 10 கிராம நிர்வாக அலுவலர்களை அருண்குமாரின் பட்டாசு கடைக்கு வரவழைக்கப்பட்டு அளவிடும் பணி நடந்தது. இதை தொடர்ந்து சிவகாசி காவல் நிலையத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சுதர்சனன் புகார் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பட்டாசு கடையின் உரிமையாளர் அருண்குமாரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

பட்டாசு கடையில் உள்ள அனைத்து பண்டல்களையும் கணக்கிட்ட பின்னர் தான் முழு மதிப்பு தெரியவரும் என்று தாசில்தார் பரமானந்தராஜா தெரிவித்தார். மேலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகஅளவில் பட்டாசுகள் இருப்பு வைத்த குற்றத்துக்காக அருண்குமார் பட்டாசு கடையின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் பட்டாசு கடை மற்றும் குடோனுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர். 

Next Story