திருப்பூர் அருகே பனியன் நிறுவன ஊழியர் வீட்டில் நிறுத்தி இருந்த கார் திருட்டு


திருப்பூர் அருகே பனியன் நிறுவன ஊழியர் வீட்டில் நிறுத்தி இருந்த கார் திருட்டு
x
தினத்தந்தி 17 Sep 2018 11:00 PM GMT (Updated: 17 Sep 2018 8:24 PM GMT)

திருப்பூர் அருகே பனியன் நிறுவன ஊழியர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை திருடிச்சென்ற முகமூடி ஆசாமிகள் 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அம்மாபாளையத்தை அடுத்த ராக்கியாபாளையம் சொர்ணபுரி ரிச்லேண்ட் 2-வது வீதியை சேர்ந்தவர் நவ்ஷாத் (வயது 42). இவர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சல்மா(35). இவர்களுடைய சொந்த ஊர் சேலம் ஆகும்.

இதனால் அவர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் குடும்பத்துடன் சேலத்துக்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த 14-ந் தேதி வேலை முடிந்ததும், இரவு நவ்ஷாத் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சேலத்துக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை சேலத்தில் இருந்து திருப்பூருக்கு வந்த அவர் வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக அவர் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் அவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் நவ்ஷாத்துக்கு செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்கள். அப்போது அவரது வீட்டின் முன்பக்க இரும்பு கதவு மற்றும் வீட்டின் கதவு திறந்துகிடப்பதாக தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அவசரமாக வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் திருட்டு போனது தெரியவந்தது.

மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. அத்துடன் பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த கணினி ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு நவ்ஷாத் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் நவ்ஷாத் வீடு மற்றும் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர்.

அப்போது நேற்று அதிகாலை 1.40 மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் 4 பேர் நவ்ஷாத் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதும், வீட்டிற்குள் இருந்த கணினி, கார் சாவியை எடுத்து வந்த அவர்கள் அங்கு நிறுத்தியிருந்த காரை திருடிச்சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இவர்கள் சுமார் ஒரு மணி நேரம் நவ்ஷாத் வீட்டு வளாகத்தில் சுற்றி வந்தது தெரியவந்தது. இது குறித்து நவ்ஷாத் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அந்த பகுதியில் 4 வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து உள்ளது. எனவே அந்த பகுதியில் போலீசார் கூடுதலாக ரோந்து சுற்றி கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story