மணப்பாறையில் மருந்து கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.3½ லட்சம் திருட்டு


மணப்பாறையில் மருந்து கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.3½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 18 Sep 2018 10:45 PM GMT (Updated: 18 Sep 2018 6:09 PM GMT)

மணப்பாறையில் மருந்து கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.3½ லட்சத்தை மர்ம நபர் திருடி சென்றார். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மதுரை ரோட்டில் ஒரு மருத்துவமனை அருகே சாதிக்(வயது 41) என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார். தினமும் அவர் காலையில் மருந்து கடையை திறந்து வியாபாரம் செய்துவிட்டு இரவில் கடையை பூட்டி செல்வது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிச் சென்ற சாதிக், நேற்று காலை கடையை திறக்க வந்தார்.

கடையின் கதவை(ஷட்டர்) திறந்து உள்ளே சென்றபோது, கடையின் மேற்கூரை உடைந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையில் இருந்த 3 கல்லாப்பெட்டி களையும் பார்த்த போது, அதில் ஒன்று உடைந்திருந்தது. மற்ற 2 பெட்டிகள் திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.3½ லட்சத்தை காணவில்லை.

இது குறித்து சாதிக், மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் வாசுகி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம நபர் கடையின் மேற்கூரையை உடைத்து, அதன் வழியாக கடைக்குள் இறங்கி ஒரு கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த சாவியை எடுத்து மற்ற கல்லாப்பெட்டிகளையும் திறந்து, அதில் ஒன்றில் இருந்த ரூ.3½ லட்சத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடையில் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு கேமராவை, ஒரு மர்மநபர் வேறு திசையில் திருப்பி வைத்து விட்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

முகத்தில் துணியை கட்டிக் கொண்டு முதலில் மேற் கூரையை உடைத்து உள்ளே இறங்கும் மர்மநபர், பின்னர் அங்குள்ள கல்லாப்பெட்டியை உடைத்தும், திறந்தும் அதில் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து பின்பக்கம் வழியாக வெளியேறும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை பார்வையிட்டு, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனைகள் உள்ள சாலையில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். இதனால் அந்த பகுதியில் உள்ள மருந்து கடையில் திருட்டு நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Next Story