தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது


தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 18 Sep 2018 9:45 PM GMT (Updated: 18 Sep 2018 8:47 PM GMT)

தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பெண் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு சண்முகராயன் தெருவை சேர்ந்தவர் பகத்சிங் (வயது 23). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நேற்று காலை பட்டாளம், கலைஞர் பார்க் அருகே சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் பகத்சிங்கை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,800-ஐ பறித்துச்சென்றனர்.

இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடினர். இந்த நிலையில் பின்னிமில் அருகே 2 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், பெரியமேடு நேவல் ஆஸ்பத்திரி சாலையை சேர்ந்த சீனு என்ற சர்மா (20), கொசப்பேட்டையை சேர்ந்த ராகுல் (20) என்பதும், பகத்சிங்கிடம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளிகள் லொடங்கு மாரி (42), ராஜாத்தி (38) ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செயப்பட்ட சீனு என்ற சர்மா மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story